கவிக்குறள் - 0005 - வெருவந்த செய்யாமை
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை **** தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561) **** தண்டனை என்பது ? ***** பிறக்கையில் யாரும் இங்கே பிழையுடன் பிறப்ப தில்லை சூழ்நிலை சேர்க்கை தானே மனத்தினில் பதிவ தாகும் , நல்லதோர் குடும்பந் தன்னில் நன்கவர் வளர்ந் திட்டாலும் தீயவர் சேர்க்கை யாலே திசைமாறிக் குற்றம் செய்வார் , மக்களால் சூழ்ந்த நாட்டில் குற்றங்கள் இயல்பாய் நேரும் குற்றங்கள் இல்லா நாடு குவலயம் கண்ட தில்லை , கையிலே செங்கோல் வைத்துக் காக்கின்ற நீதி மான்கள் குற்றத்தின் தன்மை ஆய்ந்துத் தண்டனை தருதல் வேண்டும் , செய்தவன் திருந்தும் வண்ணம் திரும்பவும் செய்யா வண்ணம் தண்டனை வழங்கச் சொல்லித் தந்தைநூல் எழுதி வைத்தான் ! **** தலைச்செல்லா - மீண்டும் செய்யாமல் ஒறுப்பது - தண்டிப்பது . **** மானம்பாடி புண்ணியமூர்த்தி . 01.02.2018 . சாவினைத் தடுப்பதற்குச் சாலையில் தடைகள்போன்று வாழ்விலும் சிலதடைகள் வருவது நமக்கு நன்று ! ...