கு.ப.ரா சில குறிப்புகள்...

ஆண் பெண் உறவுகளை, குறிப்பாக பால் உணர்ச்சிகளை அப்பட்டமாகவும் உரக்கவும் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக ஆகிவிட்டது. ஆனால், அதை சூட்சுமமாகவும் கலையுணர்ச்சியுடனும், ஒரு சிறுகதையில் அதன் கட்டுக்கோப்பும் செறிவும் குலையாமல், முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற லாவகம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாகக் கூடிவந்திருப்பதை இன்றும் படிக்கும் போது உணரமுடிகிறது. 
 
 
 
கு.ப. ராஜகோபாலனிடம் கூடிவந்த அந்த மென்மையும் கலை நேர்த்தியும், இன்று பக்கம்பக்கமாக பச்சையாக எழுதுவதாலேயே தன்னை ஒரு பெரிய புரட்சிகரமான எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்கள் உணராத ஒரு விஷயம். ஆபாசமாகவோ அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, துணிச்சலாக எழுதிவிட்டதாகவும் அவை பலத்த சர்ச்சைக்கு இடமாகி சூழலை மாற்றிவிடப் போவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர்களிடம் இருக்கும் தன்மைகள் எப்போதும் கு.ப.ரா.விடம் காணப்பட்டதில்லை. 
 
சர்ச்சைகளை உருவாக்கவோ, புரட்சிகளை ஏற்படுத்தவோ கு.ப.ரா. எழுதவில்லை. அவர் வாழ்க்கையிலும் அநுபவத்திலும் கண்டவற்றை எழுதினார். புரட்சி பேசும் அந்தத் தமிழ் எழுத்தாளர்கள் பாடம் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையில்தான் இன்றும் கு.ப.ரா இருக்கிறார் என்பதுதான் காலஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் முன்னேறி வரும் கு.ப.ரா.வின் முக்கியத்துவம்.

- தளவாய் சுந்தரம்
 

Comments

Popular posts from this blog

வாழ்க்கை வாழ்வதற்கே!

BIGG BOSS HINDI - SEASON 11 - VOTING

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பின்னணியும் உள்ளரசியலும் !